Sunday, 24 August 2014

"பழுத்த இலை உதிர்வதைப்
பார்க்கும்
சிறுபூக்கள்.
இலையின் 
நினைவுகள் உண்டு 
கனியாய் 
புடைக்கும் பூ.
அதன் தோலுக்கடியில்
அசைகிறது 
பழுத்த இலை
ஐயா.!!"
"இடைவார் கட்டாத தாத்தாவை நான் பார்த்ததில்லை.லேசாக அழுக்கு படிந்த பச்சையில், தோலாடு தோலாக இடைவார் கட்டிய தாத்தா அழகு.சிலரை சிலபொருட்களின்றி உருவகித்துப் பார்க்க முடிவதில்லை. பாட்டியை அந்த வெத்தலைப் பெட்டியும்,பித்தளை எச்சிப்பணிக்கமுமின்றி.தாத்தாவை அந்த பச்சை சிங்கப்பூர் இடைவாரும்,காதிபவன் கதர்த்துண்டுமின்றி நினைத்தல் சிரமம். முதன்முதலாக தாத்தா இல்லாமல், இடைவாரை தொடுகையில், மனசில் முழுஉருவமும் அகப்பட்டது.சின்னக்கழலை உள்ள அவர் வயிற்றை ஸ்பரிசித்த உணர்வு.பொருட்களால் எல்லாம் முடிகிறது. எச்சிப்பணிக்கம் அருகே,கதர்த்துண்டில் பொதிந்து வைத்தேன் வெத்தலைப்பெட்டியையும்,இடைவாரையும்.!!"
"அப்பத்தாவுக்கு வாதம் வந்ததிலிருந்து, ஐயா தான் குளிப்பாட்டுதல்,சீலைத் துவைத்தல் எல்லாம். அப்பத்தா கண் ஆபரேசன் பண்ணி, தடித்தக்கண்ணாடி போட்ட காலத்திலிருந்து சமையலும் இவரே. சாயந்திரமா வெந்நீர் விளாவி குளிப்பாட்டிவிட்டு, இரவில் துணி துவைப்பார். ஆம்பளை பொண்டாட்டி சீலைத் துவைக்கிறானு ஊர்ல எவனாவது சொல்லுவானு இரவில் துவைத்ததாகச் சொல்வார். ஒருகட்டத்தில், நம்ம பொண்டாட்டி சீலைய, நாம துவைக்க எவன் என்ன சொல்றதுன்னு பகலில் துவைக்க ஆரம்பித்தார். கொடியில் கலர் கலரா நூல் சீலை காயுறப்ப, குளித்த அப்பத்தா சுவரில் சாய்ந்து உட்கார்ந்திருக்கும்.பின்னால் அடுப்போடு மல்லுக்கட்டி ஐயா எழுப்பும் புகை மெல்ல மெல்ல மேகம் நோக்கிப் போகும் கணம் சமைந்தது போல மனசில். அப்பத்தா கட்டும் கோபுரக்கரைச் சீலை மெதுமெதுப்பானவை. அப்பத்தா போனதிலிருந்து ஜமுக்காளத்தின் மேல் சீலை விரித்து தான் அவர் படுப்பார். அது வெறும் மெதுமெதுப்புக்காக மட்டுமல்ல.!!"
"வெல்லப்பாகு வாசம் எழுப்பியது.
மாவு வழித்துப் பளபளக்கும் குழவி.
திருப்பிப்போட்ட பணியாரத்தின்
'சுர்ர்ர்' சத்தம்.
இருள்போல் கரிபடிந்த அடுப்படி
ஊதாங்குழல் ஊத
கிளம்பும் புகையில்
கனிந்த உன் கண்கள்
மினுங்கும் ஐயா.
சூடு தாளாமல் கம்பியில்
குத்துப்பட்டுச் சாகும்
பணியாரங்கள்.
மீந்த பாகு சட்டியில்
பணியாரம் தோய்க்க
இளகுகிறது கனவு.
காலச்சக்கரமாய் ஆட்டுக்கல்லைப்
பின்னோக்கி ஆட்டுகிறேன்.
வழவழத்து நழுவுகிறது
குழவி.!!"

-அன்றில்
"நேற்று கனவில் 
நீ சொன்ன
கால்திருடன், அரைத்திருடன்
கதை.
முதுகைத் தடவிக்கொடுத்த 
கைகள்
உனதாவென்று 
தெரியவில்லை
ஐயா.!!”

-அன்றில்
“அவள் மூச்சுக்காற்றின் வெம்மை சூழ,
வனாந்திர தனிமையுள் நிற்கிறேன்.
கூட்டுப்புழுவாய் சுருங்கிய அவளை
தைலம் தேய்த்து கால் நீவி,
தாலாட்டுப் பாடிப் படுக்க வைத்திருந்தேன்.
சூரியகாந்தி நிறைந்த தோட்டத்தில்
பட்டாம்பூச்ச்சியாய்
பறந்து திரிந்தவள்.
இடதுமுலை சப்புகையில்
இறந்து போன தாயிடமிருந்து 
எனைத் தூக்கி நடக்கையில்
தன் இறக்கைகளை பிடுங்கிப் போட்டிருந்தாள்.
வரி விழுந்த நெற்றியை
எனக்காக சுரக்காமல் தொய்ந்த முலைகளை
வெதுவெதுப்பான வயிற்றை
தடவுகையில்
மெலிந்த கையினால் பிடித்து
கண்ணை மூடித்திறக்கிறாள்.
சிமிட்டல் பேசியது எல்லாம்.
நாளை இவள் மாருறிஞ்சி பூக்கும்
சூரியகாந்திப் பூக்கள்.
நான் பறப்பேன் வண்ணத்துப்பூச்சியாய்
மனோகர மஞ்சளுக்கிடையில்.!!”

-அன்றில்

Saturday, 16 August 2014

“தாத்தா செருப்பு போடுவதில்லை.
முள்ளெடுக்க, முள்ளுவாங்கியுடன்
அமர்ந்தேன் அவர்முன்.
முட்களும், சிலாம்புகளும்
சமாதி அடைந்த கால்கள்.
நடந்து நடந்து தேய்த்த பூமி
மேல்தோலாய் காய்த்திருந்தது.
மண்ணுடன் பேசிய வார்த்தையெல்லாம்
தூசியாய் அப்பியிருந்தது.
இற்றுப்போன நகத்துடன், வெடிப்புகளாய்
ஒரு சிறு தேக்கந்துண்டு போன்ற பாதம்.
வெடிப்பின் பள்ளத்தினூடே ஓடுகிறது
வற்றிய எங்களூர் ஆறு.
அலையடிக்கும் கடலின் நுரை
முகத்தில் தெறிக்கிறது.
எல்லா முட்களும் வலிப்பதில்லை
வாழ்விலும்.
ஊக்கினால் தசை விலக்கி விலக்கி
வலிக்கும் முள் பிடுங்க,
கண்கள் சுருங்கிப் பார்க்கும்
குழந்தை முகம்.
சிறு இரத்தமென கசிகிறது
உழுத வயலும்
வேட்டையாடிய காடும்
பழகிய பாதையும்
ரேகையின் வழியே.
மண்ணை சிநேகித்து,
பெருவாழ்வு வாழ்ந்த மரத்தின்
வேரை முத்தமிடத் தோன்றுகிறது.!!”

-அன்றில்
“பள்ளியின் வாசலில், அரச மரத்தடியில்
நாவற்பழம் விற்கிறார் அவர்.
நாவல் போல் கனிந்த முகம்
சிறுமி முன் நிற்கையில்.
எனக்கு மகிழ்ச்சி 
இன்னும் நாவற்பழம் விற்பதை
தொழிலாய் பாவிக்கும் ஒருவரும்,
வாங்கித்தின்ன ஆளும் இருப்பது.
கன்னத்தில் பழம் அதக்கி, கொட்டைகளை
அவள் துப்பிக்கொண்டு சென்றது
பால்யம் என்மீது துப்பப்படுவது
போலிருந்தது.
குனிந்து ஒருகொட்டையெடுத்து
உள்ளங்கையில் வைத்துக்கொண்டேன்.
அவர் சிரித்தது
‘அவ்வாறு தான் சேகரித்த கொட்டையொன்றில்,
விளைந்தவை அப்பழங்கள்’
எனும் போலிருக்கிறது.!!”

-அன்றில்
“வளர்மதிக்கு யேசுதாஸ் ஆகவிருப்பம்.
அதிலும் பூங்காற்று புதிதானது உயிர்.
கையில் டிரான்சிஸ்டருடன் முற்றத்தில் 
நடக்கையில் பூபாளம் இசைக்கும்.
அரைகுறையாய் சொருகிய தாவணியுடன்,
முட்டிக்கு மேல் பாவாடையை பிடித்தபடி 
ஓடி வந்து விழுகையில்,
வருகின்ற காற்றும் சிறுபிள்ளையாகும்
தாண்டியிருந்தது.
என் கால் விரலிடுக்கில் அவளின் முன்னம்பல் ஒன்று.
நொடி தவறினாலும் காற்றில் கரைந்திடுமென்பதால்
அவள் தவறவிடுவதேயில்லை
சிறு இசைத்துணுக்கையும்.
நேயர் விருப்பத்தில் அவள் பெயர் வாசித்த போது
அவளின் புதைமேட்டில் ஒரு ஆட்டிடையன்
புல்லாங்குழல் வாசிக்கிறான்.
காற்று வீச, கதவசைய
முற்றத்தில் யாரோ நடப்பது போலிருந்தது.!!”

-அன்றில்
“தும்பியின் கண்ணாடிச்சிறகுகளின் வழியே
 உன் அன்பின் ஒளி
 சிதறுகிறது.
 மழைவில்லின் வண்ணம் கொண்டு
 நிரப்பிய கனாக்கள்
 வெளிறத் தொடங்குகிறது.
 குளிர்ந்த கூழாங்கல்லாய்
 இதயம் சுற்றிய நினைவுகள்
 தகிக்கும் பாலையின் பொன்மணலாய்
 வெடித்துச்சிதறும்.
 உன்மார்பில் பட்டுடைந்துத் தெறிக்கும்
 மழையின் ஸ்படிக மணிகள்,
 உறைவாளாய் இறங்கும் நெஞ்சில்.
 சருகுகளின் மேல் பாம்பாய்
 சரசரக்கும் உன் வழவழப்பின்
 மின்னல் வெட்டும் நடுமுதுகில்.
 கொண்டை முடிச்சவிழ்ந்து
 நீர்வீழ்ச்சியாய் சரியும் கூந்தலின்
 கருமை ஏந்திய கோப்பையை
 தவறவிட்டேன்.
 யாருமற்ற கடற்கரையில்
 காற்றில் படபடத்துச் செல்லும்
 உன் கைக்குட்டையை
 துரத்தும்
 வண்ணத்துப்பூச்சி நான்.!!”

      -அன்றில்



Monday, 11 August 2014

“பெயரறியா இவ்வூரின் பேருந்து நிலைய
சாக்கடையோரம் ஈ மொய்க்கப்
படுத்திருப்பவர் பால்ராசு.
பால்பண்ணை வைத்திருந்ததால்
பால்ராசு ஆனார் ராசய்யா.
எங்கூர் மக்களுடம்பில் நிறைந்திருக்கும்
நீர்ச்சத்து இவர் புண்ணியம்.
இரத்தம் அடர்வாய் இருப்பது
நல்லதில்லையென்பார்.
மடுவற்றியபின் எல்லாம் அடிமாடாய்
உண்ணியாய் உறிஞ்சிப் பிழைக்குமவர் வாழ்வு.
மீனாள் அத்தைக்கு பாலூறும் மனது.
தன்மார் ஊறவில்லையேயென இறுதிவரை
ஏக்கம்.
ஏதோவொன்றில்லையென்பது ஏதோவொன்றாய்
இருப்பதில்லை.
ஏதோவொன்று தான் வாழ்வின் நிறைவு.
ஏதோவொன்று தான் வாழ்வின் சூன்யம்.
முற்றும் இழந்து, மூட மறந்து
சித்தம் பிறண்டு, ஈமொய்க்கக் கிடப்பவரை
நக்கிக்கொடுக்கும் பசுவிற்கு தெரியுமா?
அடிமாடாய் போன தாயை விற்றவர்
இவரென.!!”

-அன்றில்

Sunday, 10 August 2014

“ஆதிகாலத்தில் நாம் அன்றில்களாயிருந்தோம்.
நமது சிறகின் நீலத்திலிருந்து
பெருகி வியாபித்திருந்த வானத்தில்
பறந்து பறந்துத் தீர்த்தோம்
சிறகுகள் ஓயும்வரை.
ஆதிமழையின் முதல்துளியை
அலகால் பிடித்து எனக்கூட்ட
என் சிறகசைப்பில் வெட்டியது மின்னல்.
நமது கூடலால் எழுந்த வெப்பத்தைக் கடத்தி
பகுதிப்பாலையாக்கினாய் புவியை.
என் சிறகுகளின் அணைவில்
நீ சிறகுலர்த்தியபோது தோன்றிய தீயில்
பற்றியெரிந்தது காடு.
நாம் ஆடிப் பாடினோம்
காதலின் தொன்மப் பாடலை.
நமது காதலின் கதையை
நீ சொல்லக் கேட்டு வெட்கப்பட்ட
ஏவாள் கையிலிருந்தது கடித்த ஆப்பிள்.
எனக்காக நீ வடித்த கண்ணீர்
கடலாய் பெருகியதென ஆதாம்
கடிந்துகொண்டான்.
இமயக்கல்லின் மீது தனித்திருக்கவிட்டு
இரைதேடிச் செல்லுமுன்
நீ கேட்டுக்கொண்டாய்
வரும்வரை உயிர் மாயாமல்
தனித்திருக்கவேண்டுமென.
இலைகளாய் காலம் உதிர உதிர,
கண்டங்கள் நகர நகர
பரிணாமித்தது பூமி.
காத்திருப்பின் துயரம் வடிவதாயில்லை.
ஏகாந்த மேகத்தினுள் முகம் புதைத்து
அழவேண்டும் போலிருக்கிறது.
இமயமுகட்டில் காத்திருக்கின்றேன்
தனியொரு அன்றிலாய்
காதலின் தொன்மப் பாடலை
பாடியபடி.!!”
-அன்றில்

Saturday, 9 August 2014

“சீதா ஆயா வேப்பெண்ணெய் தான் 
தேய்ப்பாள் எப்போதும்.
பேரப்பிள்ளை முகம் சுளிக்கும் அதன் வீச்சத்தை
வேப்பெண்ணெய் வாசமென்பாள்.
கண்கள் மூடி, ஒரு மூச்சு இழுத்து 
நிறுத்திப் பார்த்து சொல்வாள்.
‘இது அவுக மேலு வாசம்ல’.
சிலருக்கு எல்லாவற்றையும் வாசமாகவே
நுகர முடிகிறது.
கண்மாய் கரையின் இடதுமூலை வேம்பின் கீழே
காலை நீட்டி அமர்ந்து,
கைகளால் துழாவித் துழாவி
பழம் பொறுக்கி, உலர்த்தி
முத்தாக்குவாள்.
டவுனுக்கு சைக்கிளெடுக்கும் யாரையும்
பொக்கைவாய்ச் சிரிப்புடன்,
கன்னம் உருவி முத்தம் கொடுத்து
செக்கில் எண்ணெய்யாட்ட
சம்மதிக்க வைக்க முடிகிறது அவளால்.
போன ஆடியில், வேப்பம்பழம் நசுங்க
தலை வைத்து படுத்தவாறே,
மரத்தினடியில் நல்ல சாவு.
மூலைவேம்பின் கீழ் நிற்குமெனக்கு
நாலு வேப்பமுத்தை ஓடுடைத்து,
கசக்கி நுகர வேண்டும்
போலிக்கிறது.!!”

-அன்றில்
"வீட்டுக்கார ஆச்சி வந்தாள்
கொல்லைப்புறத்துக்கு,
செம்பருத்தி பறித்துப் போகவென.
ஒரு கணம் நின்று
கண்கள் விரிய,
கரும்பச்சை இலைதடவி,
சிவந்த மெல்லிய பூவிதழ்
ஸ்பரிசித்தாள்.
செடியிலே பூவை விட்டு
திரும்பிப் போகையில்,
ஆச்சி கண்களில் பூத்திருந்தது
செம்பருத்தி.
அம்மா சொல்லியிருந்தாள்,
பதின்ம வயதில் தூக்கு மாட்டிக்கொண்ட,
ஆச்சியின் மகள் பெயர்
'செம்பருத்தியென'.!!"

-அன்றில்
"கிணற்றின்
மேலேயிருந்து நானும்
உள்ளேயிருந்து மீனும்
ஒருவரையொருவர்
எட்டிப் பார்த்துக்கொண்டோம்
வெட்கத்துடன்.!!"

-அன்றில்

“லாரி ஓட்டிய சுந்தரம் மாமா
புதுவயல் போனதேயில்லை.
புதுவயல் சரக்கும் எடுப்பதில்லை.
போக நினைப்பது மாதிரி தான் போல
போக நினைக்காததும்.
குறிப்பிட்ட எல்லைக்குள்ளே 
பரவிக்கிடக்குது வாழ்வு.
உடல் கிடத்தப்பட்ட ரெண்டாங்கட்டுச் சுவர்
விரிசல் விட்டிருந்தது.
நீளும் விரிசலின் வழியே எதைத் தேடியோ
பயணிக்கிறது ஊதுபத்திப்புகை.
அழுது வீங்கிய முகத்துடன்
சாவதானமாய் கொண்டை அள்ளிமுடியும்
வள்ளியத்தை முகத்தில் உறைந்த அமைதி.
கிணற்றின் அடியாழ நிசப்தம் போல
அத்தனை அடர்த்தி.
புதைகுழியில் போட அத்தை தந்தாள்
பழைய வேட்டியுடன்
மரப்பிரேம் போட்ட புகைப்படம்.
கருப்பு வெள்ளையில்
பெல்பாட்டம் பேண்டும், பெரிய காலர் வைத்த சட்டையுடன்
மாமா கைவைத்து நின்றார்
தாவணியின் மேலே அன்னப்பட்சி டாலர் போட்டிருந்த
அக்காவின் தோள் மீது.
படத்தின் கீழே இடது மூலையில்,
‘தங்கம் ஸ்டுடியோ
புதுவயல்’.!!”

-அன்றில்
"நாளை பறிக்கலாம் எனப் பார்த்து வைத்த
சிவப்பு கொய்யாப்பழத்தை
கொறிக்கிறது குட்டி அணில்.
அதன் பூக்காலத்திலிருந்தே
முத்தமிட்டு உறவாடிய
சிநேகம் அதுக்கு.
பழமுண்ட அணில் முழுக்கொய்யாவாக
கனிநுனி பூச்சருகாகும் வால்.
பழமுண்ட திருப்தி எனக்கு.!!"

-அன்றில்
“மாரியம்மன் கோவில் கரகமெடுப்புக்கு
எப்போதும் கடை போடும் கனகு அக்கா.
ரெண்டாள் உயர வேப்பங்கன்னுக்குக் கீழே
ராசுவின் பலூன்கடைக்கு பக்கத்தில்.
கடையென்றால்
பார் வைக்காத பெரிய சைக்கிள்,
ரெண்டு பாய், ஒரு நார்ப்பெட்டி,
சாராய போத்தலில் சீலைத்திரியிட்ட விளக்கு.
அக்காவுக்கு நாடகம் என்றால் பித்து.
திருவிழாவுக்கு எப்பவும் அரிச்சந்திர மயான காண்டம்.
ஞானகுருசாமி சந்திரன்,
பொன்னமராவதி ஆறுமுகம் பபூன் என்றால்
சோறு தண்ணி வேணாம் அதுக்கு.
‘இதுதான்டா ஒரிஜினல் நடிப்பு
ஜவ்வுமிட்டாய் மெல்லுற மாதிரி வாயசைக்க ஒருத்தன்
சாகமாட்டாம அவனுக்கு பேச இன்னொருத்தன்
சினிமால இதுக்குமுன்னே ஒண்ணுமில்லேடா’
எனச்சொல்லும் கனகு அக்காவுக்கு
முப்பத்தைந்து வயதிருக்கலாம்.
கல்யாணம் ஆகாட்டியும்
நூல்சீலை தான் கட்டும்.
கோகுல்சாண்டல் பவுடர்
நாலணா சைசுல சாந்துப்பொட்டு
ஒரு குட்டி தேங்காப்பூத்துண்டு சகிதம் வரும்
அக்கா சொல்லும்
‘எனக்கு மாப்ள அந்த அம்பிலில தான்
கிடைப்பானாக்கும்.’
வீட்டில் முதல்ஆளாய் கறிசோறு சாப்பிட்டுக் கிளம்பி
ஒரு பாயில் சாமான்களைப் பரப்பி,
ஒரு பாய் விரித்து உட்காரும் மடியில்
ராசண்ணன் குழந்தையோடு.
காற்றில் அசைந்து அசைந்து
அணைந்து போவதாய் பாவ்லா காட்டும்
விளக்கொளியில் தெரியும்
பொட்டு வைத்த அக்கா முகத்திற்கும்
உள்ளே அலங்கரிக்கப்பட்ட
அம்மன் முகத்திற்கும்
அதிக வித்தியாசமில்லை.
திருவிழாவில் வாங்கும்
கல்கோனாவும், ஜவ்வுமிட்டாயும்
தனிச்சுவை.
ரெண்டு ரூபாய்க்கு நாலு கல்கோனா போக
ஒரு பெரிய சூட மிட்டாயும்,
கன்னத்தில் கிள்ளிக்கொடுக்கும் முத்தமும்
இனாம்.
ராசண்ணன் பவர் போடப் போக,
அழும்குழந்தையைப் பாலூட்டக் கொடுத்துவிட்டு
பலூன்கடையைச் சேர்த்துப் பார்த்துக் கொள்ளும்
கனகக்கா கண்களில் பொங்கி வழிவது
தாய்மை.
சைக்கிளில் சுக்குக்காபி விற்கும் ஐயாவிடம்
பண்டமாற்றில் ஒருகட்டு செய்யது பீடிக்கு
எனக்கும் சேர்த்து இரவெல்லாம்
காபி வாங்கித்தரும்.
நேரம் செல்லச்செல்ல
தூக்கத்தில் கண்கள் கிறங்க
கையை மடக்கி முட்டுக்கொடுத்து
ஒருக்களித்துப் படுத்து நாடகம் பார்க்கும்.
நாடகம் பார்த்தப்படி தூங்கிப்போகும் என்னை
அலேக்காக தூக்கிப் போய் தன் பாயில் போட்டு
மடியில் தலை கிடத்தி கோதியபடி
‘புத்தம் புது காலை’ எனப் பாடத்தொடங்கும்போது
அந்த மடியில் குழந்தையாகவே
இருந்துவிடத் தோன்றும் வாழ்வு முழுதும்.
வருடங்கள் உருண்டோடியதில்
வாழ்வின் அச்சிலிருந்து விலகிவிட்டோம்
வெகு தொலைவு.
இப்போதெல்லாம் திருவிழாக்கு கடை போடுவதில்லை
கனகு அக்கா.
ராசண்ணன் சொன்னார்
ஏழெட்டு வருடம் முன்பு ஆத்துப்பாலத்தில்
நாடகக்கார வேன் மோதி அக்கா....
இருந்தாலும் திரைகட்டி ஓட்டும் சினிமா
அக்காவுக்கு பிடிப்பதில்லை.
மரமாகிவிட்ட வேப்பங்கன்னுக்குக் கீழே
பாயை விரித்து படம் பார்க்கையில்
அருகில் கிடக்கும் கூழாங்கல்லை கல்கோனாவாய்
வாயில் போட்டுக்கொள்ள.
தலையைக் கோதும் காற்றுவிரல்களுடன்,
திரையில் ஓடுகிறது அரிச்சந்திர மயான காண்டம்.
தூரத்தே அம்பிலியில் கேட்கிறது
‘புத்தம் புது காலை, பொன்னிற வேளை’.!!”

-அன்றில்


"பௌர்ணமி முழுநிலவு அழகென்று 
நம்பினேன்.
தென்னங்கீற்றால் துண்டாடப்பட்ட
நிலவை பார்க்கும்வரை.!!"

-அன்றில்
"பொய்மை நுரைக்கும்
நினைவுகளிலிருந்து
பூக்கத் தொடங்குகிறது
ஒரு வாடாமல்லி.!!"

-அன்றில்




"பெரிய லண்டியன் விளக்கு
பாட்டைய்யா வாங்கினது.
அதன் மேற்பகுதி உயர்த்தி
கிளாஸை கவிழ்த்து
அதை ஏற்றியவுடன்
உயிர்ப்பித்த நிறைவு.
அதன் ஒளியில் பார்த்த
உலகம் அத்தனை அழகு.
அய்யாவுக்கு ஏனோ ஐந்துகட்டை
டார்ச்லைட் பிடிக்கவில்லை.
எப்போதும் அவர் கட்டிலின் கீழே
இரவெல்லாம் மினுங்கும் அது.
கூட்டுவண்டியில் மாடுகளின் ஜல்ஐல்லிற்கு
அரைவட்டமாக அது ஆடுவது ரம்மியம்.
ஐயா,பாட்டைய்யாவின் தலைமாட்டில் எரியும்போது
அவர்களின் மூச்சு உலாவுகிறது
முட்டைவடிவ கண்ணாடிக்குள்.
பொத்தானை அழுத்தியவுடன் எரியும்
மின்சார விளக்கில் எரிவது
உயிர்ப்பிழந்த நமது வாழ்வு.!!"

-அன்றில்
“டிவி கருப்பு என்கிற புல்லட் கருப்பு

தென்னந்தோப்புக்கு நடுவே குளுகுளுவென
வாழ்ந்து வந்தவன்.
வெக்கைமிகுந்த எங்கள் வீட்டில் 
கொல்லைப்புறக்கேணிக்கருகில் 
ஆத்துமணல் கொட்டி நீர் தெளித்து
அவன் கிடப்பு.
கருப்புநிறத்தில் மயிற்பீலி மினுமினுப்பு.
சாவப்பட்சியில் மயிலுக்கு வரும் நிறம்.
தோட்டா மாதிரி வேகமாம் பிராயத்தில்
அதனால் புல்லட் கருப்பு
தீபாவளிபோரில் டிவி ஜெயித்ததால்
டிவி கருப்பு ஆனான்.
ஊறவைத்த கொண்டைக்கடலைப் பிடிக்குமளவு
சின்ன வெங்காயம் பிடிப்பதில்லை.
பெரிய கம்பு இஷ்டம்.சின்ன கம்பைத்
தொடுவதேயில்லை.
இரவில் எனது தலைமாட்டில் படுக்கை.
எங்களுடன் படுக்கையில் ஒருநாள் கூட
கூவியதேயில்லை.
கொஞ்சம் அழகன் என்பதில் திமிருண்டு
நெஞ்சை நிமிர்த்தியே நடப்பான்.
முதுகைத் தடவிக்கொடுத்தால் கண்கள் கிறங்க
கழுத்தைத் திருப்பிச் சிக்கெடுப்பான்.
பெரிய கோழியைத் தவிர எதையும் திரும்பிப்
பார்க்காத ஏகபத்தினி விரதன்.
பள்ளி முடிந்து வந்து சாப்பிடுகையில்
சாப்பிட்டு முடிக்கும்வரை பக்கத்தில்
அமைதியாக நிற்பான்.
இரவில் தோசைமாவெடுத்து காதிற்கு கீழுள்ள
சிவப்பு மடல் போன்ற தொங்கலில்
தோடு போடுவேன்.
கையில் செல்லக்கொத்து கொத்துவான்.
அவன் முன்னால் எந்த சாவலைத் தூக்கினாலும்
வீம்பாக நம்மைத் திரும்பிக் கூட
பார்க்க மாட்டான்.
பேரன்புக்காரன்.
சுவர் தாண்டிப் பக்கத்து வீட்டுச் சாவல்
வந்தால் சண்டைக்கு மல்லுகட்டுவான்.
சண்டை போட விடாமல் தூக்கினால்
அந்த கோபம் தீரும் வரை நம்மைக் கொத்துவான்.
எவன் சொன்னது ஐந்தறிவென்று?
சண்டையில் சூரன்.
போரில் குத்து வாங்கியதேயில்லை.
அவனுக்கென்று தனிக்கத்தியுண்டு.
ஊர் புகழ்ந்த அர்ச்சுனன் வாத்தி சாவலை
ஒரே மூட்டில் சோலியை முடித்தவன்.
ரெண்டு தடவை ஈராசி உள்பட
பதினெட்டு முறை ஜெயித்தவன்.
மாசிமகப் போர்.
நான் பள்ளிக்கு
அவன் சாவப்போருக்கு.
பட்சியில் அன்று ஐந்தாம் ஜாமத்தில்
மயில் ஊன்.
ஊனென்றால் காயத்துடன் வெற்றி.
மாலை திரும்புகையில் தோத்த சாவல் அடுப்பில் கொதிக்க
செப்பட்டையில் ரெண்டு,தொடையில் ஒன்றாக குத்து
வாங்கிப் படுத்திருந்தான்.
கருத்து உறைந்த இரத்தம் பிதுக்கி
மஞ்சள் தடவி ஊசி நூலால்
தையல் போட்டேன்.
நாளாக நாளாக நீலம் பாரித்துக்
குன்னிக்கொண்டே போனான் கருப்பு.
பள்ளி முடிந்து வந்த மாலை அவன் எங்குமில்லை.
வெக்கை தாளாமல் ஆத்துமணலுக்கடியில்
படுத்துவிட்டான் போல.
அய்யா சொன்னார் வலது செப்பட்டையில்
ஒரு ஆழமான சொருகுடா
நாம பார்க்கலை அதான்....
வானமெங்கும் மினுமினுக்கும் அந்த கருப்புநிறமாக
காதெல்லாம் அவன் கூவும் பேரிரைச்சல்.
செவலையும் வெள்ளைப்பொரிவெள்ளையுமாக
ஆயிரம் பேர் வந்தாயிற்று.
யாருக்கும் நான் தோசைமாவு
தோடு போட்டதில்லை.
யாரும் என்னருகே அமர்ந்து
செல்லமாய் கொத்தவில்லை.!!”

-அன்றில்




"சீமைக்கருவை மரமொன்றின்
பச்சைப்பாம்பாய் தொங்கும்
இளம்பச்சை காய் ஒதுக்கி,
நறுக்கிய அணில்வால் போன்ற
அதன் பூப்பறித்தேன்.
மெதுமெதுப்பான மஞ்சள்
மகரந்த கொத்தை,
காம்பிலிருந்து உருவி
உள்ளங்கையில் குவித்து ஊத
இவ்வெளியெங்கும் பெய்யும்
மஞ்சள் மழையில்
நனைகிறேன்
ஒரு வெல்வெட்பூச்சி போல.!!"

-அன்றில்
"நாளை பறிக்கலாம் எனப் பார்த்து வைத்த
சிவப்பு கொய்யாப்பழத்தை
கொறிக்கிறது குட்டி அணில்.
அதன் பூக்காலத்திலிருந்தே
முத்தமிட்டு உறவாடிய
சிநேகம் அதுக்கு.
பழமுண்ட அணில் முழுக்கொய்யாவாக
கனிநுனி பூச்சருகாகும் வால்.
பழமுண்ட திருப்தி எனக்கு.!!"

-அன்றில்

Friday, 1 August 2014

முகத்தில் வெயிலடிக்கும் சூரியனை
மறைக்கும் சிறுவெண்மேகமும்,
உடலில் பட்டு உள்ளம் வருடும்
இந்த தென்றலும்,
என்னைப் பார்த்துச்சிரிக்கும் ஏதேனும்
ஒரு சிறுகுழந்தையும்,
மனதை நனைக்கும் பூவாளியெனப்
பெய்யும் மழையும்,
அந்த வெள்ளைத் தும்பைப் பூவும்,
மனதில் இசைக்கும், இசைத்து
அசைக்கும் இன்னிசையோ,
உன் நினைவேற்படுத்துவதை எவ்விதம்
தடுக்கவியலும்?
மனதின் அடியில் கசிகிறது உன்நினைவுகள்
சிறு ஊற்றாக.
-அன்றில்