Wednesday, 24 December 2014

“என்ன எழுதி என்ன பிரயோஜனம்?
ஒருநாள் கூட அம்மாவின் 
கை பிடித்து உள்ளங்கை 
பார்த்ததில்லையே.!!”
“இந்தக்கட்டைவிரல் காயமான போது
அக்கா தான் காப்பிபொடி வைத்துக்கட்டினாள்.
அப்போது நிரந்தரமாக வராமல் 
விருந்துக்கு வந்திருந்தாள்.
அப்போது பால் காப்பி தான்
லட்சுமி இருந்தது.
அப்போது பெரிய வீட்டில் இருந்தோம்.
அப்போது அம்மா கழுத்தில்
ரெட்டைவடச் சங்கிலி போட்டிருந்தாள்.
அப்போது அப்பா இருந்தார்.
இப்போது இந்தத் தழும்பு மட்டும்தான்.!!”
“இந்த மணலுக்குள்ளே தான்
மீன்கள் எதிர்ப்பக்கம் ஏறுகின்றன
தாத்தாவின் தோளமர்ந்து நான்
கடந்துகொண்டிருக்கிறேன்.
யாரோ உரசிய மஞ்சள் வாசம் 
வீசிக்கொண்டிருக்கிறது.
இந்தப் பூவரசம் தன் முகத்தைப்
பார்த்துக்கொண்டிருந்தது.
வயிறு நிறைய மேய்ந்த லட்சுமி
தண்ணீர் குடிக்கிறது.
எங்கெங்கோ உண்டான குமிழ்கள்
உடைகின்றன.
கண்முன்னே தனமக்கா மூழ்கிக்கொண்டிருக்கிறாள்.
இந்த மணலுக்குள்ளே தான்
இன்னும் எங்களூர் ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது.!!"
"காய்ச்சலாவென என் கழுத்தில்
நான் கைவைத்துப் பார்க்கும்போது
அவை அம்மாவின்
கைகளாயிருந்தது.!!"
“ஒரு பட்டாம்பூச்சியைப் பிடித்திருக்கிறீர்களா?
விரல்களில் வண்ணம் பதிய
பிடித்துக் கொல்வதல்ல.
புல்லின் நடக்கும் குழந்தையின்
கால்களுடன் அதைப் பின்தொடர்தல்.
தேனுண்டு மயங்குமதைக் கண்டு
கன்றை நோக்கும் பசுவாதல்.
மயங்குதலின் உச்சியில்
சின்னக்கண்களின் சூரியனை
குளிர்ந்த உங்கள் கண்களுக்கு
இடம்மாற்றிக்கொள்ளுதல்.
மலரை முத்தமிடுவது போன்ற
ஸ்பரிசத்துடன் அதன் இறக்கைகளைப் பிடித்தல்.
அந்தக்கால்களுக்கு ஓய்வு தர
முல்லைப்பூவின் மென்மைக்கு உங்கள் கைகளை
மாற்றிக்கொள்ளுதல்.
இருத்தலையும் பறத்தலையும்
அதனைத் தேர்வு செய்ய விடுதல்.
கனன்ற சூரியனைத் திருப்பித்தந்து
குளிர்வுடன் நோக்குதல்.
தான் ஒரு பட்டாம்பூச்சி என்ற உணர்வுடன்
அதனை இருக்கவிடுதல்.
பட்டாம்பூச்சியை ஒரு பட்டாம்பூச்சியாய்
பார்த்தல்.
இப்போது பிடியுங்கள் ஒரு பட்டாம்பூச்சியை
அல்லது
நீங்களே ஒரு பட்டாம்பூச்சி.!!”



"எனது இந்தக்கைகள் தனித்ததில்லை.
கைகளில் பத்திரப்படுத்தி வைத்திருக்கின்றேன்
உன் பிஞ்சுவிரல் ரேகைகளை.!!"
"வெற்றுப் பெருவெளியில் தனியே
மிதக்கின்றேன் ஒரு சிறகென.
தனிமையின் உருட்டலில் கீழே விழவிடாமல்
ஊதிக்கொண்டே செல்கிறது
உனது நினைவலைகள்.
கையில் பிடித்துப் பத்திரப்படுத்தாமல்
வேடிக்கைப் பார்க்கிறாள் அச்சிறுமி.!!"
"கையிலிருந்து ஊரிய
எறும்பொன்று பீர்க்கங்கொடியின்
மஞ்சள் பூ நோக்கி நகர்கிறது.
நான் கையிலிருந்து
எறும்பு நகர்ந்த தடத்தில்
விரல்களால் நடக்கிறேன்.!!"
"நேற்றிலிருந்து ஒரு பொட்டுக்கூட அழவில்லை.
இறப்பின் கசடுகள் அழுத்த
அவள் சோர்வாயிருந்தாள்.
அவள் முகம் பார்த்து சிரிக்க முயன்று தோற்கிறேன்.
நட்சத்திரங்கள் வீசியெறியும் சிரிப்பு இனி
அவளிடம் வரப்போவதில்லை.
துக்கம் மீறிப் பேசுகையில் அவள் உதடுகள்
உலர்ந்து,ஒலியற்று பிரிய மறுக்கிறது.
எங்கோ வெறித்துப்பார்த்தப்படி விரல்கள்
சுவற்றில் ஏதோ கிறுக்குகின்றன.
மெல்ல நெருங்கி 'சாப்பிடுறியாம்மா' என்கிறேன்.
திடுக்கிட்டுத்திரும்பி 'அம்மாவென'
பெருங்குரலெடுத்து அழத்தொடங்கினாள்.!!"
"இலையுதிர்க்காலம்
காற்றின் மெல்லிய பேச்சுக்குக் கூட
இலைகள் தலையாட்டிச் சாகின்றன.
உனது நினைவாக சேர்த்து வைக்கப்பட்ட
குறுந்தகவல்கள் கொஞ்சம் கொஞ்சமாய்
அழிக்கப்படுகிறது என்னால்
கடந்துபோன வசந்தகாலத்தை நினைத்தபடி.
நினைவுகளின் பதிவிலிருந்து மறைய
மறுக்கிறது உன்முகம்.
ஏனோ தளிர்களுடன் நின்ற மரத்தை
பார்க்கத் தோன்றுவதில்லை.
எனது பிரதிபலிப்பாய் இருந்த மரம்
மறைய மறுக்கிறது நினைவுகளிலிருந்து.!!"


"தாயறியா
பிஞ்சுக்கைகளுக்குள்
மார்பு போல
பிதுங்குகிறது
ரோஸ்நிற பலூன்.!!"
"எந்த நேரம் வந்தாலும்
எப்ப வருவோம்னு 
ஐயா வாசலில் உட்கார்ந்திருப்பது போல
இப்பவும் தெரிகிறது.
'வாப்போவ், என்ன இவ்வளவு நேரம்'
கூட தெளிவாய் கேட்கிறது.
ஜீரணிக்க முடியா விசயங்களை
மனம் ஏற்றுக்கொள்வதேயில்லை.
ஏற்றுக்கொண்டே ஆகணுமா என்ன?
சில பிம்பங்கள் அப்படியே
இருந்துவிட்டுப் போகட்டுமே.!!"
"நீச்சத்தண்ணியில குனிந்து
முகம் பார்க்கிறாள்.
பொட்டில்லா நெற்றி நோக்கி
நகருகிறது
மிதக்கும் புளியம்இலை.!!"
“ஒரு வெட்டு வெட்டினால்
ஊரும் மண்புழு.
ஒரு அடி தோண்டினாலே 
ஊறும் ஊற்று.
நாலு படி இறங்கினால் 
இடுப்பு நிறையும் தண்ணீர்.
ஒரு காத்துக்கே விழும்
பட்ட ஓலையும்,
ரெண்டு பனம்பழமும்.
என்ன செய்தால் கிடைக்கும்
அவ்வாழ்வு ? "
"முகம் பாராமல்
நீங்கள் வீசிச்சென்ற
பிச்சைக்காசில்
வாங்கிய இட்லியில்
பாதியைத் தான்
காக்கையாய் அலையும்
உன் பாட்டனுக்குப் போடுகிறாள்
அந்தக் கிழவி.!!"


"தனமக்கா அப்படித்தான்
நிற்பாள்
ஏதோ பெயர் கிறுக்கியழித்த
தென்னை வளையத்தை
தடவியபடி அண்ணாந்து
மரம் பார்த்து.
கொஞ்ச நாளாய்
அணில்குஞ்சொன்று அதுவரை
ஏறிப்பார்த்துவிட்டு இறங்குகிறது.
அக்கா இருந்திருந்தால்
தோடு குலுங்க சிரிப்பாள்.!!"
“ஏதேச்சையா தலையில் இடித்தது சுவற்றில் மாட்டியிருந்த வாய்க்கூடு.அதனுள்ளே பச்சை படிந்த கழுத்துமணி.இப்போது தான் எங்கும் இல்லை. அப்போது எல்லா வீட்டிலும் வண்டிமாடு இருக்கும்.எங்க வீட்டில் பெரிய மாடும்,சின்ன மாடும்.
பேருதான் பெரிய மாடு. அம்புட்டு சாது.அப்புராணி. தண்ணிக்காட்ட போன அதுவே எழுந்திருச்சி நிக்கும்.அவுத்து விட்ட நேரா ஜல்ஜல்னு அமைதியா அது பாட்டுக்கு போகும்.
சின்னவுகளுக்குப் பயங்கரக் குசும்பு. தண்ணிக்காட்ட அவுக்கப் போகும் போது தான் துரைக்கு மூத்திரம் வரும். ‘சார் வெய்ட் பண்ணமாட்டிங்களோ கொஞ்சம்’கிற மாதிரி ஒரு பார்வை பாத்துட்டு ஆற அமர மூத்திரம் போகும்.
ஒரு தவிட்டுப்பானை, அப்புறம் ரெண்டுபேருக்கும் தனித்தனியா தண்ணிக்கு ரெண்டு தொட்டிக்கல்லு.அவுத்து விட்ட உடனே நேராப்போய்க் குடிச்சிட்டு இருக்கிற பெரிய மாட்ட ஒரு முட்டு முட்டுவாக. அது பயந்திட்டு ஒதுங்கி நிக்கும். இருக்கிற தவிட்டைலா காலி பண்ணிட்டு பெரிய மாட்டை வாலால ஒரு அடி அடிச்சிட்டு தண்ணித்தொட்டிக்கு போவாகச் சின்னவுக. பெருசு மிச்சத்தை நக்கிப்புட்டு தண்ணிக்குடிக்க வரும். சின்னது தண்ணிய போட்டுட்டு ரெடியா இருப்பாக.
பெருசு வாய வைக்கிறப்ப போய் இவுகளும் வாய விடுவாக.பெருச முட்டி தள்ளுவாக.தனியா புடிச்சுக் கட்டினா கத்திகிட்டே இருக்கும்.பெருசை நிம்மதியா தண்ணிகூடக் குடிக்க விடாது. சரி கழுதை தொலையுதுன்னு பெருசு அமைதியா இருக்கும்.வண்டில கூடச் சின்னதைப் பூட்டிட்டு தான் பெருச பூட்டுறது. ஆனா வண்டியிலும் சரி , உழுவறப்பயும் சரி ஒரு சேடு பண்ணாது.
என்னா கதிரடிக்கும் போது தான் கொஞ்சம் வாய நீட்டும் சின்னது. அதுக்குத் தான் வாய்க்கூடு.பெருசு வைக்கோல தொடாது.
ஒருநாள் சூழ்நிலை காரணமா பெருசை வித்துப்புட்டார் ஐயா.அதுல இருந்து சின்னது ஒரு கத்து கூடக் கத்தல. சும்மா பேருக்குத் தவிட்டை நக்கிபுட்டு, ரெண்டு வாய் தண்ணியக்குடிச்சிப்புட்டு வந்து படுத்துரும். பக்கத்துல போனா உப்புத்தாள் நாக்கால ரெண்டு நக்கு நக்கும்.லேசா தலைய நம்மளோட அணைவா சாய்ச்சிக்கும்.காலப்போக்குல சின்னதையும் வித்து, ஊரே ஒரு வண்டிமாடு கூட இல்லமா வழிச்சுப் போட்டமாதிரி ஆகிப்போச்சு.
அந்த வாய்க்கூட்டை எடுத்து கையில வச்சிக்கிறேன்.உள்ள இருந்து ஒரு உப்புத்தாள் நாக்கு எட்டிப்பாக்குது நக்க.கழுத்துமணி சத்தம் காதுல கேட்டுக்கிட்டே இருக்கு.!!”
"குப்பைக் கிளரும்
கோழிமூக்கிலிருந்து
உதிரும் சிறுமணலாய்
இருந்தால் போதும்
இவ்வாழ்வு.!!"
“முற்றத்தை திரும்பித் திரும்பிப்
பார்த்தவாறு வாசல் வந்தாள்.
வீட்டைத் திரும்பித் திரும்பிப்
பார்த்தவாறு தெரு கடந்தாள்.
ஜன்னல் வழியே கையசைத்து
பேருந்து நிறுத்தம் பார்த்தவாறு
போகிறாள்.
காற்றில் கலந்து திரும்பி
வந்ததொரு கண்ணீர்த்துளி.!!

Thursday, 9 October 2014

வெறுப்பின் துளி வழிகிறது
முதுகுத்தாரையில்
அமைதியாய்ச் சிரிக்கிறது
தொட்டிப்பூ.
முத்த நட்சத்த்திரங்கள்
இறைந்துக்கிடக்கும் முற்றத்தில்
உலர்ந்த ஒற்றைக் கண்ணீர்த்துளி
தேடிக்கொண்டிருந்தாள்.
ஞாபகப்பறவை பறக்கிறது
மனதெங்கும்.
மெல்லத் தலை தடவ
கண்கள் செருகிப் பார்க்கிறது
பூனை.
மெல்லிய சிலந்திநூலென
இழைகிறது நேசம்.!!
பேசும் குரலில் அவர் பாடுவதில்லை.
தடதடக்கும் தண்டவாளத்தை
சாந்தப்படுத்துவது போல்
தொடைகளைத் தட்டி,
பாடுகையில்
தோன்றி மறைகிறது
கலர்கலர் பேனாக்களும்
பனிக்குல்லாயும்.
பனிப்பாறை மீதமர்த்தி
உருகவிடுவதும்,
கங்கு தீயை உள்ளில் வீசுவதும்
எனது நாட்களை
தகவமைத்துக் கொண்டிருந்தார்.
பணி ஒய்வு பெற்ற நாளில்
பரிசளித்த பனிக்குல்லாயை
திருப்பித் தந்தவாறு
‘என் மனைவிக்கு நான்
பாடுவது பிடிக்காது’
எனச்சொல்லிச் சென்றார்.
அந்தக்குரல் குளிரில்
நடுங்கும் ஒருவனுடையது.!!
“நேற்றைய மரம் விட்டு 
பக்கத்து மரம் கொத்துகிறது
மரங்கொத்தி.
குப்பைமேட்டின் புதுக்குப்பையை
கிளறுகிறது கோழி.
தாமரைக்கு இப்பக்கமுள்ள இலைக்கு
மாறியிருந்தது தவளை.
இக்கரையில் வாலடித்துச் சலம்பிய
விரால் மடைக்கரையில்.
அதே வேப்பமரத்துத் தேன்கூட்டில்
தேனீயாய் அலைகிறது மனம்.!!”
ராமசாமிக்கு பேரன் பரிசு வாங்குறத பாக்கப்போறதுல சந்தோசம் தான். ஆனா கடுதாசியோட வந்த பொட்டணம் தான்....
நல்லா இத்துப்போகாத வேட்டியா ஏதாவது கம்பிகிம்பி பட்டுப் பொத்துப்போனதாப் பாத்து டார்டாரா
கிழித்து வைத்துக்கொள்வார். எல்லாமே ஒரே நீள அகலத்தில்.குளிக்கும்போது கூடவே துவைத்துவிடுவார்.கொடியில் அழகாய் ஊமத்தம் பூ போல் அவை ஆடிக்கொண்டிருக்கும்.
அந்த வெள்ளைக்கும், சிவப்பு பட்டுக்கயிறுக்கும் அவ்வளவு அழகாக இருக்கும் அவர் உழும்போது.
‘மறக்காம போட்டுட்டு வந்துடு’
‘யய்யா உங்கப்பன் தைச்சுகொடுத்த பட்டாபட்டியே இன்னும் போட்டதில்லைய்யா. இத ?’
‘கோமணத்தைக் கட்டிட்டு வந்து மானத்தை வாங்கிறாதே’
‘..........ம்ம்ம்.’
ஆண்டாண்டு காலம் இதைக்கட்டித்தானே மானம் காத்தோம். இப்ப என்ன மானம் போகுது? ஒண்ணும் புரியல.
தேதி நெருங்க நெருங்க பயம் வந்துடுச்சு. ஈரக்குலைய யாரோ விட்டு விட்டு உருவுற மாதிரி.அடிக்கடி கொடியில் காயும் கோமணத்தைத் தடவிப்பார்த்தப்படியே நின்றிருந்தார்.
வயலைப் பாத்தா நாத்தெல்லாம் வெள்ளை வெளேர்ன்னு அசையுது. கனவுலயும் ஏதோ ஒரு கை கோமணத்தை உருவுற மாதிரி வந்துச்சு.
தண்ணியக்குடிச்சிட்டு திரும்பிப் படுத்தா கோமணம் புலம்புது காதுக்குள்ள,
‘நேத்து வந்த பய சொல்றான்னு அறுபது எழுபது வருடம் உடம்போட ஒட்டிக்கிடந்த என்னை அத்தெறியப் போறியா ?’
மகன் முன்பக்கம் பின்பக்கம் சொல்லிக் கொடுத்திட்டுப் போனார்.மெல்லக் கோமணத்தை உருவியெடுத்தார்.வாழ்வில் முதன்முதலாய் எல்லார் முன்னும் நிர்வாணமாய் நிற்பதாய்ப் பட்டது. தரையில் கிடந்த கோமணம் காற்றில் அசைந்தது. ஜட்டிக்குள் காலை நுழைத்தவாறே சுவற்றில் சரிந்தார்.அட்டையிலிருந்த மனிதக்கண்களை மூடியப்படிக்கிடந்தது கோமணம். !!
உன் அடையாளங்கள் முற்றிலும் 
அழிக்கப்பட்ட அறை.
ஜன்னலோரம் கிளைதாழ்த்திச் சிரித்த
வேம்பை வெட்டியாயிற்று.
உனக்குப்பிடித்த அரக்குநிற
மெத்தை விரிப்பை
சோப்பு டப்பாவில் மீதமிருந்த
மஞ்சள் துண்டை
நம் துணிகள் பின்னிக்கிடந்த
அழுக்குக்கூடையை
குளியலறை கண்ணாடியில்
ஒட்டிவைத்த ஸ்டிக்கர் பொட்டை
நகப்பூச்சு படிந்த போர்வையை
இடம்மாறி கட்டில்காலில் விழுந்த
முத்தத்தின் கறையை
பின்புறம் உன் பற்தடம்
பதிந்த பேனாவை
அம்புக்குறியிட்டு பெயர்
கிறுக்கிவைத்த மேஜையை
எல்லாம் மாற்றியாயிற்று.
ஞாபக அறைக்கு இடம்பெயர்ந்த
மனதை எங்ஙனம் மீட்பது?!!
"சாயந்திர சண்டைக்குப்
பின்னான
மல்லிப்பூவும்
கருவாட்டுக்குழம்பும்
அத்துணை 
அழகானவை.!!"
கவிதைக்குழம்பு செய்யத் தேவையான பொருட்கள் :-
துடிக்கும் பல்லி வால் – 1
உடல் நசுங்கிய நாகம் (நெடுஞ்சாலையிலெனில் நலம்) – 1
வண்ணத்துப்பூச்சி (இறகு நீக்காதது) – 2
உறைந்த கண்ணீர்த்துண்டுகள் – 3 மேஜைக்கரண்டி
உடைந்த நிலா (பொடித்தது) – 2 மே.க
பழுத்து விழும் இலை – 5
ஆறாத ரணத்திலிருந்து வழியும் குருதி – 200 மி.லி
காதலன் (அ) காதலி (பிரிந்தவர்கள் நலம்) – தேவைக்கேற்ப
குழந்தை (1௦ வயது மிகாத பெண்) – 1
கை உடைந்த பொம்மை – 1
முதிர்கன்னி – 1
ஆணாதிக்கம் – 3 மே.க
பெண் மீதான வன்முறை – 5 மே.க
கனவுகள் (நிறைவேறாதவை) – 2
நதி – 1௦௦ மி.லி
தனிமைத்துயர் – 1
அழிந்த வாழ்க்கைமுறை – தேவைக்கேற்ப
மேகம்,வானம்,காற்று,மழை,இளம்வெயில் – தேவைக்கேற்ப
பூக்கள் – வாசனைக்கு
கடவுள் (அ) புத்தன் – வாசனைக்கு
உலர்ந்த முத்தங்கள் – அலங்காரத்திற்கு
செய்முறை:-
அடியில் விதிமுலாம் பூசிய வாழ்க்கை நான்ஸ்டிக் பாத்திரத்தில் எல்லாம் போட்டு
வெறுப்பின் கொதி வரும்வரை கிளறவும். பின் அன்பின் சூட்டில் கழிவிரக்க பதம்
வரும்வரை கிளறி இறக்கி பரிமாறவும்.
இன்னும் விருப்பமான பொருட்கள் இருந்தால் சேர்த்துக் கொள்ளலாம். அசைவப் பிரியரெனில் பெண்ணின் அந்தரங்க உறுப்புகள் சேர்த்துக்கொள்ளலாம்(இரு பாலரும்).!!”
தனிமையெனும்
பெரும் இரவை
கடக்க முயல்கின்றேன்.!!
அவள் இப்படிபட்டவளில்லை.
என் சொல்லின் சூடு தாளாமல்
மௌனப் பாலையில் 
புதைந்திருக்கிறாள்.
முடிந்து முடிந்து அவிழ்க்கும்
ஆள்காட்டிவிரலின்
சீலைமுடிச்சுகளின் தடம்
கழுத்தில் மெல்லப் பதிகிறது.
விழாமல் கனிந்து நிற்கும்
கண்ணீர்த்துளிகள்
மனதெரிக்கிறது.
வழக்கமான கால அளவைத் தாண்டி
உயிர் இறுக்குகிறாள்.
இனி நடவாதென எழும் நேரம்
தோள் பற்றித் தலை சாய்க்கிறாள்
யூகலிப்டஸ் வாசத்துடன்
கொட்டுகிறது கண்ணீர்.
முடிச்சுகளில் இப்போது
இருவிரல்கள்.!!
கொட்டைச்செடி பாலெடுத்து, வைக்கோல் குழலில் குமிழூதுகிறாள்.ஒட்டியும் ஒட்டாமலும் 
பறக்கின்றன கண்ணாடிக்குமிழ்கள்.நான் கெண்டைக்காலருகே கொலுசை நோக்கி நாக்கை விட்டுவிட்டு நீட்டும் பாம்புராணியைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.முத்தம் பெற்ற கொலுசுமுத்துகள் சிவந்த குண்டுமணியாகிருந்தன.
அவள் பிடியில் சேகரண்ணன் சிகரெட் பிடிக்கும் சாயல். ஒவ்வொரு குமிழ் பிரிவதையும் ஆழ்ந்த நிதானத்துடன் உள்வாங்கிக்கொண்டிருந்தாள். அப்போது அவள் கண்களே வெள்ளை குண்டுமணி போலிருந்தன.கண்ணிலிருந்து வழிந்த நேசம் குமிழ்களை மெல்ல மெல்ல கீழே விழாமல் ஊதிக்கொண்டே சென்றது. .அண்ணாந்த அவள் நெத்தியிலும், வலது கண்ணிலும் குமிழின் நிழல் மெதுவாக ஊர்ந்தது.
‘பாரேன் எவ்ளோ அழகா பறக்குதுன்னு’
‘யக்கோவ் பாம்புராணி கடிக்குமா?’
‘டேய் ஒருநா இது மேல ஏறி உலகத்தைச் சுத்தணும்டா.நம்ம சேகரைப் பாக்க சிங்கப்பூர் வரையாவது’
‘ஏங்கா பாம்புராணி நாக்கை உள்ள வச்சுக்காத?’
‘நாம ஏறுனா அது உடைஞ்சிரும்லடா.நீ வேற கன்னுக்குட்டியாட்டம் இருக்க’
‘நாக்கு பட்டா விஷமாக்கா?’
‘போடா எல்லாம் உடைஞ்சிருச்சு. ஒண்ணே ஒண்ணு மட்டும் போகுதுடா’
பாம்புராணி நகல, ஓடிச்சென்று கட்டிக்கொண்டேன்.சட்டைப்பையிலுள்ள குண்டுமணிகள் என் நெஞ்சிற்கும் அவள் தொடைக்கும் இடையே உருளத் தொடங்கின.
வா போவோமென்று இடுப்பில் தூக்கி வைத்து முத்தமிட்டாள்.அது எனக்கான முத்தமில்லையென்றாலும் அந்த எச்சில் உள்ளுக்குள் குமிழ் குமிழாய் இறங்கியது.அம்மாவின் அதே எச்சில் ஈரம்.சிவப்புத்தாவணியை என் முகத்தில் வெயில் படாமல் இறக்கிவிட்டவாறு நடக்கத்துவங்கினாள்.
குலுங்க குலுங்க குண்டுமணியெல்லாம் குதித்து விழத்தொடங்கியது வழியெங்கும்.புருவத்திற்குக் கிடையாய் கையை வைத்து பார்த்தவாறு சொன்னாள்
‘டேய் அது சிங்கப்பூர் பிளேன் போற பக்கம் போதுடா’
தாவணி வழியே பாத்தேன். அக்காவின் அன்பு ஒரு குமிழாய்ப் போய்க்கொண்டிருந்தது.
‘அது அம்மாகிட்ட கூடப் போகுமாக்கா?’
‘அதுக்கு இன்னும் ரொம்பப் பாலெடுத்து, பெரிய வைக்கோல்ல, பெரிய முட்டையா ஊதணும்டா.நாளைக்கு போவோமா...?’
நான் எவ்வி அவள் கன்னத்தை முத்தமிட்டேன்.!!
ஒருநிலையில் தனிமை
பழகிப்போகும்.
அந்த இருட்டில் கண்கள்
பார்க்கத் தொடங்கிவிடும்.
தனிமை அழகு.!!


கடக்க கடக்க தூரம்
நினைக்க நினைக்க பாரம்
வாழ்க்கை ரொம்ப மோசம்

நீயில்லாத இவ்வாழ்வை,
வாழும் இந்நகரத்தை,
கரையாத இந்நாளை,
கனவுகளில் மட்டும் 
பூக்கும் உன்னை,
சிறு தூசியென
உதற முடியவில்லை.!
சிரித்து விடவே கூடாதென
நினைத்திருந்தாள்.
இறுக்கத்தை எப்படி 
தக்கவைப்பதென்பது அவளின்
பெருங்கவலை.
எவ்வளவு இறுக்கினாலும்
இளகிவிடும் முகம்.
அவ்வளவு அழகாக
நடிக்கிறான் மறந்ததாக.
மலர்ந்த இம்முகத்தைக்
கொண்டு என்ன செய்வேனென
நொந்து கொண்டாள்.
போதாக்குறைக்குப் பரிசை
ஒளித்ததை வேறு பார்த்துவிட்டாள்.
அவன் தலை தெரிந்ததும்
ஓடிச்சென்று அணைத்தாள்.
வீடெங்கும் தெறித்த இறுக்கப் பூட்டுகள்.
முத்தங்களுக்கிடைப்பட்ட நொடியில்
பரிசை பிரித்தான்.
ஜன்னல் வெளி வந்து
விழுந்தது மலர்ந்த முகம்.
‘இதே கலர் இதே டிசைன்ல
என்கிட்டொண்ணு இருக்குன்னு
தெரியாதா?’..!!
இத்தனைக்குப் பின்பும்
நம்புகிறாளென்பது
எத்துணை ஆசுவாசம்.
என் பிழைகளை 
எவ்வளவு எளிதாக 
புறக்கணித்திருக்கிறாள்.
அழகாக வெள்ளரி அரிந்து
உப்பு மிளகாய்ப்பொடியிட
முடிகிறது அவளால்.
எவ்வளவு நேர்த்தியான துண்டுகள்
என் பிழைகளைப் போல்.
மனம் கூசி எங்கோ
வெறித்துப் பார்க்கிறேன்.
துண்டொன்றை வாயருகே
நீட்டிச் சிரிக்கிறாள்.
கண்கள் தளும்பிச் சரிகிறேன்.
தொடை நடுவில் முகமெடுத்து
புதைத்துக் கொள்கிறாள்.
இந்த இருட்டில் தொலைந்து
எவ்வளவு நாட்களாயிற்று.
முதுகில் இரண்டு சொட்டுக் கண்ணீர்
தடவலின் வெம்மையில்
கரைந்து விட்டிருந்தேன்
உப்பாக.!!

Tuesday, 23 September 2014

“இருபுறமும் பூச்சாடியிருக்க
நடுச்சேரில் பூப்போட்ட
பாவாடை தாவணியில்
சடை முன்பின் இட்டு
நெஞ்சில் தாமரை டாலருடன்
கருப்பு வெள்ளையாய் 
சிரிக்கும் தனமக்கா தான்
சாம்பல் படிந்த தலையுடன்
பழுப்பேறிப்போன தாலிக்கயிறுடன்
குத்துக்காலிட்டு 
ஊதாங்குழல் ஊதுகிறாள்.!!
“பனம்பழம் பொறுக்க எழுப்பினாள்
கலாக்கா.
வழமைபோல் ஒத்தக்காச்சி 
எனக்கென முனங்கிவிட்டு
தூங்கிய என்னைத் தூக்கி 
இடுப்பில் வைத்துக்கொண்டு
நடக்க ஆரம்பித்தாள்.
வீட்டின் வெளிவிளக்கு
நட்சத்திரம் போல் மின்னும்
தொலைவு பனங்காடு.
வேர்வையுடன் குட்டிகுரா வாசமும்,
பனியின் குளிரும்,
அவள் மார்பின் வெதுவெதுப்பும்
இறுக அணைத்துக்கொள்ள,
பனம்பழம் விழுந்த சத்தம் கேட்டுத்
தூக்க முடியாமல் தூக்கி
அவள் ஓடியபோது
விழித்துக்கொண்டேன்.
அவள் புகைப்படத்தின் முன்
ஒத்தக்காச்சி வைத்திருந்தாள் அம்மா.
அக்கா குட்டிகுரா வாசத்துடன்
சிரித்தது போலிருந்தது.!!”
“பரபரப்பற்ற ரயில் நிலையத்தின் நடைமேடை முடிவில் அப்படியேதானிருக்கிறது அந்த அமர்விடம். தூசியும் காய்ந்த புங்கைப்பூவுமாய்.இங்கு தான் அவள் வந்து நின்றாள் நனைந்த ஒரு மழைப்பறவை போல. இரத்தசோகை தேகத்தில், ஜ்வாலை பொழிந்த கண்கள். கற்பலகை மீது கூந்தல் சொட்டிய குளத்தில் விழுந்த நான், அவள் கண்களின் மின்னல் பிடித்து மேலேறினேன். நெடுநாள் கூடிப்பறந்த பறவையைப் போல்பார்த்தாள். சிலரால் சிலரை நெடுநாள் பழகியது போல் அணுக முடிகிறது. கண்களால் ஏதேதோ பேசினாள். அது பேரன்பின் மொழி.கனிந்து கண்ணாடியாய்ப் பிரதிபலித்தேன் அன்பின் சூட்டை. அவளுக்கான வாழ்வின் ஜன்னலில் கம்பிகள் இல்லாதது குறித்தும், நினைத்த நேரம் விர்ரென வானம் ஏகுவதையும், வானிலிருந்து பார்த்தால் எல்லாமே அழகென்றும் சொன்னாள். கம்பிகள் இல்லாத ஜன்னல் பாதுகாப்பற்றதில்லையாவென எனக்கேட்டேன் . நான் அனுபவிக்காத சுதந்திரமல்லவா அது? பொறாமையின் நிழல் என் கண்களில்.ஒன்றும் சொல்லாமல் சிரித்தபடி தலையின் விழுந்த புங்கைப்பூக்களைத் தட்டி விட்டாள். பின் விழும் மழையை ஏந்திக்கொள்வது போல் பார்த்தாள்.அவளே ஒரு நிரம்பித் தளும்பும் கோப்பை போலிருந்தாள்..ஒவ்வொரு மழை நாளிலும் இங்கு வருவதாகவும், அவள் வர நினைக்கும் போதெல்லாம் மழை பொழிவதாகவும் சொன்னாள்.கடந்து சென்ற ரயிலின் பேரிரைச்சலுக்குக் காது பொத்திய என்னைப் பார்த்து சிரித்தபடி சொன்னாள் நீ பயப்பட வேண்டியது இடிக்கல்ல, மின்னலுக்கு.தூறல் முடிந்த பொழுதில் அவளின் சிறகுகள் காய்ந்து விட்டிருந்தன. பறக்கத் தயாரானவள் அருகில் வந்து கையைப் பிடித்துக் கல்லில் வைத்தாள். முதன்முதலாய் ஒர் ஆணின் கையைப்பற்றுவதாகவும்,உன் ஜன்னல் கம்பிகள் இற்று உதிரும் வரை, இனி வரும் மழை நாட்களில் இதில் படிந்த உன் ரேகைகளை என் இறகுகளால் தடவிப்பார்த்துக்கொள்வேனெனச் சொல்லிப் பறந்தாள். என் கைளில் ஒரு வெம்மையான இறகு.மனதில் மெல்லிய வெயிலடித்தது.கம்பிகள் எளிதாய் உதிர்வதில்லை.இதோ இன்று ரேகை படிந்த இடத்தில் அந்த இறகை வைத்தேன். நினைவுகளில் அவளின் சிறகசைவு.பின்னாள் இரைச்சலுடன் ரயில் கடந்துக்கொண்டிருந்தது.சலனமற்று வானைப் பார்த்தேன். கருத்து நகர்ந்த மேகத்தின் முதல் துளி இறகின் மேல் விழுந்தது. அவள் ஜன்னலுக்குக் கம்பிகள் முளைத்திருக்கலாம்.!!"
“அடிமை வானின் நிலவு தகிக்கிறது.
சூரியன் தன் சாட்டைக்கதிர்களை
சொடுக்கிறது.
இக்கடலின் குளிர்ந்த நீர்மையை
நான் உணர்ந்ததேயில்லை.
மண்ணின் வாசம் என்னை
அன்னியனென்கிறது.
காற்று நீயொரு அடிமையென
கூவுகிறது.
என்னும் ஏன் அடிமைவாழ்வு
என்கிறீர்களா?
நிச்சயம் விடைபெறுவேன்
பணியிடத்துப் பூஞ்செடி
நிச்சயம் பிழைத்துக்கொள்ளுமென
நம்பிக்கை வருமோர் நாளில்.!!"
“நான் எரிமலை வாயில் 
கூடுகட்டியவள்.
அந்த நெருப்புக்குளத்தில் 
நீந்திக்குளித்த சிறுபறவை.
புகையும் சாம்பல் மேகம்
கிழித்துப் பறக்கும் சிறகசைவில்
அனல் கக்கும்.
இத்தேகமெங்கோடும் தீக்குழம்பு.
அன்றலர்ந்த உன் நேசத்தில்
கொஞ்சம் கொஞ்சமாய்
குளிர்ந்து கொள்கிறேன்.
உன் தீண்டலில் சாம்பலாய்
உதிர்க்கிறேன் இறகுகளை.
மீறி வெளிப்படும் கனல் கூடலில்
வேர்வை குளிர் போக்க.
துரோக மேகத்தின்
திராவக மழை கொண்டெனை
அணைத்தாய்.
துளிகள் ஒவ்வொன்றும்
வாங்கிப் பற்றுகிறேன்.
உள்ளில் கனரும் கங்கின்
திகுதிகு நடனம்.
மீண்டும் வந்துவிட்டுருந்தன
தீயின் இறகுகள்.
காறி உமிழவும்
உன் சாம்பல் எடுத்தூதவும்
ஒரு நொடி ஒரே நொடி.
நான் நெருப்புக்குளத்தில்
நீந்திக்குளித்த சிறுபறவை.!!”
“பேருந்து ஜன்னல் சதுரத்தின்
வழியே பார்க்கிறேன்.
வாழ்வின் காம்பஸில்
ஒரு வட்டம் போட்டு முடித்த
பென்சில் தேகம்.
வாயருகே கைகள் குவித்து
கண்கள் கிறங்க நிதானித்து
பின் தேள் கொட்டியது போல்
ஒர் உதறல்.
வழமை போல் 
தன் பேச்செல்லாம்
புகையாய் மாற்றியபடி.
பழைய துணியிலான ட்ரைசைக்கிள்
இருக்கையில் இல்லாத தூசியை
ஒரு தட்டுத்தட்டி ஏறி அமர்ந்து
மிதிக்கத் துவங்கினார்
மணியுடன் இணைத்தக் கம்பியை
விட்டுவிட்டு இழுத்தபடி.
காதுகளில் ஊரில் முதன்முதலாய்
அவர் வாங்கிய பிளசர் காரின்
ஹார்ன் சத்தம்.!!"
Lik
“கசந்த மலரின் மகரந்தமாய் 
காத்துக் கிடந்தேன்
நெடுங்காலம்.
ஏதேனுமொரு மஞ்சள் 
பட்டாம்பூச்சியின் காலிலமர்ந்து
வருவாய் இனிய மகரந்தமென.
கடற்கரையில் தனித்துக்கிடக்கும்
சிப்பியை எடுத்துக்கொள்ளும் 
கை போல
உலர்ந்துவிட்ட என் ப்ரியத்தின்
மயிரிழைகளை ஆதூரமாய்
தடவிக்கொடுத்தாய்.
நிறமிழந்து வெளிறிய
கனாக்களுக்குச் சொர்க்கத்து
மலரின் வண்ணமெடுத்து
சாயமேற்றினாய்.
ஏகாந்தவெளியினில் மிதக்கையில்
வந்துவிட்டிருந்தது
நேசக்காய்ச்சல்.
குளிர்ந்த உன்கண்களில்
ஒரு காட்டுத்தீயின் நடனம்
மெல்ல மெல்ல ஜ்வாலை
வாங்கிக் குளிர்காய்கையில்
முணுமுணுக்கிறேன் ஆதிவாசியின்
பாடலை.
சோப்புக்குமிழாய் வெடித்துச்சிதறிய
வாழ்வில் விழுகிறோம்
அடுத்தடுத்த மலர்களில்
நித்திலமாய்.
மழைக்காட்டில் அருகருகே
கனிந்த பழங்களை
உண்ட கிளிகள்
காதல்மொழி பேசி
பிரிந்துவிட்டன.
நாம் ஒரே குழியில் விழும்
நேசத்தின் விதைகள்.!!"