Wednesday, 24 December 2014

“என்ன எழுதி என்ன பிரயோஜனம்?
ஒருநாள் கூட அம்மாவின் 
கை பிடித்து உள்ளங்கை 
பார்த்ததில்லையே.!!”
“இந்தக்கட்டைவிரல் காயமான போது
அக்கா தான் காப்பிபொடி வைத்துக்கட்டினாள்.
அப்போது நிரந்தரமாக வராமல் 
விருந்துக்கு வந்திருந்தாள்.
அப்போது பால் காப்பி தான்
லட்சுமி இருந்தது.
அப்போது பெரிய வீட்டில் இருந்தோம்.
அப்போது அம்மா கழுத்தில்
ரெட்டைவடச் சங்கிலி போட்டிருந்தாள்.
அப்போது அப்பா இருந்தார்.
இப்போது இந்தத் தழும்பு மட்டும்தான்.!!”
“இந்த மணலுக்குள்ளே தான்
மீன்கள் எதிர்ப்பக்கம் ஏறுகின்றன
தாத்தாவின் தோளமர்ந்து நான்
கடந்துகொண்டிருக்கிறேன்.
யாரோ உரசிய மஞ்சள் வாசம் 
வீசிக்கொண்டிருக்கிறது.
இந்தப் பூவரசம் தன் முகத்தைப்
பார்த்துக்கொண்டிருந்தது.
வயிறு நிறைய மேய்ந்த லட்சுமி
தண்ணீர் குடிக்கிறது.
எங்கெங்கோ உண்டான குமிழ்கள்
உடைகின்றன.
கண்முன்னே தனமக்கா மூழ்கிக்கொண்டிருக்கிறாள்.
இந்த மணலுக்குள்ளே தான்
இன்னும் எங்களூர் ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது.!!"
"காய்ச்சலாவென என் கழுத்தில்
நான் கைவைத்துப் பார்க்கும்போது
அவை அம்மாவின்
கைகளாயிருந்தது.!!"
“ஒரு பட்டாம்பூச்சியைப் பிடித்திருக்கிறீர்களா?
விரல்களில் வண்ணம் பதிய
பிடித்துக் கொல்வதல்ல.
புல்லின் நடக்கும் குழந்தையின்
கால்களுடன் அதைப் பின்தொடர்தல்.
தேனுண்டு மயங்குமதைக் கண்டு
கன்றை நோக்கும் பசுவாதல்.
மயங்குதலின் உச்சியில்
சின்னக்கண்களின் சூரியனை
குளிர்ந்த உங்கள் கண்களுக்கு
இடம்மாற்றிக்கொள்ளுதல்.
மலரை முத்தமிடுவது போன்ற
ஸ்பரிசத்துடன் அதன் இறக்கைகளைப் பிடித்தல்.
அந்தக்கால்களுக்கு ஓய்வு தர
முல்லைப்பூவின் மென்மைக்கு உங்கள் கைகளை
மாற்றிக்கொள்ளுதல்.
இருத்தலையும் பறத்தலையும்
அதனைத் தேர்வு செய்ய விடுதல்.
கனன்ற சூரியனைத் திருப்பித்தந்து
குளிர்வுடன் நோக்குதல்.
தான் ஒரு பட்டாம்பூச்சி என்ற உணர்வுடன்
அதனை இருக்கவிடுதல்.
பட்டாம்பூச்சியை ஒரு பட்டாம்பூச்சியாய்
பார்த்தல்.
இப்போது பிடியுங்கள் ஒரு பட்டாம்பூச்சியை
அல்லது
நீங்களே ஒரு பட்டாம்பூச்சி.!!”



"எனது இந்தக்கைகள் தனித்ததில்லை.
கைகளில் பத்திரப்படுத்தி வைத்திருக்கின்றேன்
உன் பிஞ்சுவிரல் ரேகைகளை.!!"
"வெற்றுப் பெருவெளியில் தனியே
மிதக்கின்றேன் ஒரு சிறகென.
தனிமையின் உருட்டலில் கீழே விழவிடாமல்
ஊதிக்கொண்டே செல்கிறது
உனது நினைவலைகள்.
கையில் பிடித்துப் பத்திரப்படுத்தாமல்
வேடிக்கைப் பார்க்கிறாள் அச்சிறுமி.!!"