Tuesday, 23 September 2014

“கசந்த மலரின் மகரந்தமாய் 
காத்துக் கிடந்தேன்
நெடுங்காலம்.
ஏதேனுமொரு மஞ்சள் 
பட்டாம்பூச்சியின் காலிலமர்ந்து
வருவாய் இனிய மகரந்தமென.
கடற்கரையில் தனித்துக்கிடக்கும்
சிப்பியை எடுத்துக்கொள்ளும் 
கை போல
உலர்ந்துவிட்ட என் ப்ரியத்தின்
மயிரிழைகளை ஆதூரமாய்
தடவிக்கொடுத்தாய்.
நிறமிழந்து வெளிறிய
கனாக்களுக்குச் சொர்க்கத்து
மலரின் வண்ணமெடுத்து
சாயமேற்றினாய்.
ஏகாந்தவெளியினில் மிதக்கையில்
வந்துவிட்டிருந்தது
நேசக்காய்ச்சல்.
குளிர்ந்த உன்கண்களில்
ஒரு காட்டுத்தீயின் நடனம்
மெல்ல மெல்ல ஜ்வாலை
வாங்கிக் குளிர்காய்கையில்
முணுமுணுக்கிறேன் ஆதிவாசியின்
பாடலை.
சோப்புக்குமிழாய் வெடித்துச்சிதறிய
வாழ்வில் விழுகிறோம்
அடுத்தடுத்த மலர்களில்
நித்திலமாய்.
மழைக்காட்டில் அருகருகே
கனிந்த பழங்களை
உண்ட கிளிகள்
காதல்மொழி பேசி
பிரிந்துவிட்டன.
நாம் ஒரே குழியில் விழும்
நேசத்தின் விதைகள்.!!"

No comments:

Post a Comment