Tuesday, 23 September 2014

“நான் எரிமலை வாயில் 
கூடுகட்டியவள்.
அந்த நெருப்புக்குளத்தில் 
நீந்திக்குளித்த சிறுபறவை.
புகையும் சாம்பல் மேகம்
கிழித்துப் பறக்கும் சிறகசைவில்
அனல் கக்கும்.
இத்தேகமெங்கோடும் தீக்குழம்பு.
அன்றலர்ந்த உன் நேசத்தில்
கொஞ்சம் கொஞ்சமாய்
குளிர்ந்து கொள்கிறேன்.
உன் தீண்டலில் சாம்பலாய்
உதிர்க்கிறேன் இறகுகளை.
மீறி வெளிப்படும் கனல் கூடலில்
வேர்வை குளிர் போக்க.
துரோக மேகத்தின்
திராவக மழை கொண்டெனை
அணைத்தாய்.
துளிகள் ஒவ்வொன்றும்
வாங்கிப் பற்றுகிறேன்.
உள்ளில் கனரும் கங்கின்
திகுதிகு நடனம்.
மீண்டும் வந்துவிட்டுருந்தன
தீயின் இறகுகள்.
காறி உமிழவும்
உன் சாம்பல் எடுத்தூதவும்
ஒரு நொடி ஒரே நொடி.
நான் நெருப்புக்குளத்தில்
நீந்திக்குளித்த சிறுபறவை.!!”

No comments:

Post a Comment