Saturday, 6 September 2014

“சித்திரைச் சூரியனின் சாம்பல்
புழுதியாகக் காலில்.
தண்ணீர்ப்பாக்கெட்டின் சிதறிய துளிகள்
புழுதி பொத்த தடங்கள்.
ஒருபோதும் போக நினைக்காத 
பாதையில்,
மனம் நின்றிருக்க
உடல் மட்டும் போகுது.
திராவகக் குளத்தில் நாலு 
முங்கு முங்கினாற்போல்.
எவன் சுழற்றுவது 
விதிச்சோழிகளை?
‘முகத்தில் விழிக்காதே’ என்று
சொல்லிய முகத்தில்
எப்படி விழிப்பது?
அதுவும் நாலுபேர் முன் 
மானம் கெடுத்தவளை.
அன்று மானம் கோமணத்துணி.
‘இப்பத்தான் படிக்கப் போனதுல 
கூட ஒண்ணைக் கூட்டிட்டு
வந்துருதே’.
புடலங்காய் காதல்.
‘நேத்துவரை பார்க்கணும்னு
இழுத்திட்டு கிடந்துச்சே’.
வீராப்பு மீசையை மழித்தேறிய
துப்பில்லை.
‘இன்று என்னன்னு கேட்க 
நாதியில்லை’ எனும்போது
தானே உதிர்கிறது மீசை.
அந்தக் கம்பிக்கேட்டிற்கு
அப்படியொரு சூடு.
விரைத்த அவள் கண்களில் இருந்த
ஏக்கச் சூரியனின் சூடு.
ஓடிவந்து முகம்படித்த கொலுசு
ஓடுகிறது மாட்டிவிட்ட
கைகளைத் தேடி.
இப்போது அது கொலுசுச்சத்தம்
இல்லை.
இருபது வருட அழுகையாய்
காணா ஏக்கமாய்
தகிக்கும் கோபமாய்
பரல்கள் வெடித்துச்சிதறும்
பேரோசை.!!”

No comments:

Post a Comment