சில வேதனைகள்
சில வலிகள்
சில உணர்வுகளை
வார்த்தைகளாய் மாற்ற முயன்று
தோற்றுப்போகிறோம் நாம்.
நினைவில் ஊருகின்றன வார்த்தைகள்
ஒரு மண்புழுப் போல.
வார்த்தைகளின் எச்சங்களை
மௌனங்கள் கொண்டு நிரப்புகிறோம்
வேறுவழியின்றி.
வார்த்தைகள் தராத அர்த்தத்தை
மௌனங்கள் தருகின்றன.
வார்த்தைகளின் நீட்சியாய்
மௌனங்கள் நிற்கின்றன.
புரிந்து கொள்ளலில் இருக்கின்றன
மௌனத்தின் கனங்கள்.
அவை மனதை அழுத்துகின்றன
ஒருபெரும் பாறையைப் போல
புரியாத மௌனங்கள்
அர்த்தம் தேடி அலைகின்றன
ஒரு அகதியைப் போல.
-அன்றில்

No comments:
Post a Comment